
நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் 24 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற நிலையில் கடந்த 4-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ஏற்பட்ட நிலையில் சுமார் ரூ.30 லட்சம் வரையில் ஒரு வினாத்தாள் விற்பனையானதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தியாவில் 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் அரியானாவில் மட்டும் 6 மாணவர்கள் முதலிடம் பிடித்திருந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பூதாகரமாக வெடித்த நிலையில், இது தொடர்பான விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் லீக் விவகாரத்தில் விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு ஒரு புகாரின் மூலம் 2020 ல் நடந்த ஆள்மாறாட்ட மோசடி ஒன்றை கண்டுபிடித்துள்ளது. அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு ஆண்டில் தேர்ச்சி அடைந்த தற்போது மருத்துவம் படித்து வரும் அஜித் கோராவின் புகைப்படம், கடந்த 2020ல் தேர்ச்சி அடைந்த ஜோத்பூர் எய்ம்ஸ் கல்லூரியில் படித்து வரும் அவரது உறவினரான சச்சின் கோராவின் ஹால்டிக்கெட்டில் இருப்பது தெரியவந்துள்ளது.
இரு ஹால் டிக்கெட்களிலும் அஜித் கோராவின் புகைப்படம் இருப்பது உறுதியான நிலையில் இருவரையும் அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.