ஆடுகளம், காஞ்சனா-2, கேம் ஓவர் ஆகிய தமிழ் படங்களில் நடித்த நடிகை டாப்சிக்கு பாலிவுட்டில் பல்வேறு திரைப்படங்கள் குவிந்து வருகிறது. பிங்க் திரைப்படத்தின் வாயிலாக அவருக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், பல்வேறு படங்களை கைவசம் வைத்து உள்ளார். இப்போது அவர் ஜெயம் ரவியின் ஜனகன மன திரைப்படத்தில் நடிக்கிறார்.

சில நாட்களுக்கு முன் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி ஒன்றில் டாப்சி பங்கேற்றார். அப்போது டாப்சி கவர்ச்சியான உடையணிந்து கழுத்தில் மகாலட்சுமி அம்மன் உருவத்துடன் கூடிய நெக்லஸ் ஒன்றை அணிந்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின் கவர்ச்சி உடையில் கடவுள் உருவம் பொறித்த நெக்லஸை எப்படி அணியலாம் என வலைத்தளத்தில் அவருக்கு எதிராக நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் டாப்சி அணிந்திருந்த ஆடை, அணிகலன் இந்து கடவுள் மற்றும் இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக சொல்லி பாஜக MLA மகன் ஏக்லவ்யா கவுர் என்பவர் மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார். எனினும் வழக்கு ஏதும் பதிவுசெய்யப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு பற்றி விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ஆய்வாளர் கபில் சர்மா தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.