ஆந்திர பிரதேச மாநிலத்தில் எலுரு நகர்புறத்தில் தங்கெல்லாமுடி பகுதியில் சூதாட்ட கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நேற்று கிறிஸ்மஸ் நாளான அன்று மாலை இன்ஸ்பெக்டர் சத்யநாராயணா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் துர்கா பிரசாத் மற்றும் பிற காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது படுரி நிலையம் என்ற பகுதியில் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வந்தனர். அங்கே காவல்துறையினரை பார்த்ததும் சூதாட்ட கும்பலில் உள்ள பலர்  தப்பியோட முயன்றனர்.

ஆனால் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு  சூதாட்ட கும்பலில் இருந்து 30 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த கும்பலிடம் இருந்து ரூபாய் 8.10 லட்சம் பணமும், 25 ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஒரு பைக் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சட்ட விரோதமான சூதாட்டத்தை நடத்தி வந்த பில்லா வெங்கடேஷ் மற்றும் மற்றொரு முக்கிய குற்றவாளியும் தப்பி ஓடியுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் சூதாட்டம் குறித்தும் இதன் பின்னணியில் உள்ள விவரங்கள் குறித்தும் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.