
சென்னை பாடியநல்லூர் பகுதியில் கே ஆர் வெங்கடேசன் என்ற மிளகாய் பொடி வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல், செம்மர கடத்தல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. குறிப்பாக செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் ஆந்திரா காவல் துறையினர் இவரை பலமுறை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர் பாஜகவில் இணைந்தார்.
அவருக்கு தமிழக பாஜகவில் ஓபிசி பிரிவு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் இவர் பண மோசடியில் ஈடுபட்டதாக செங்குன்றம் காவல் நிலையத்தில் பாஜக மாநில நிர்வாகி கே ஆர் வெங்கடேசன் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆவடியில் வைத்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு இவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் ஆந்திரா தெலுங்கானா தமிழ்நாடு காவல்துறையினரை டேக் செய்தது குறிப்பிடத்தக்கது.