
பீகார் மாநிலத்தில் மிரட்டி பணம் பறித்த வழக்கில் பாஜக எம்எல்ஏ மிஸ்ரி யாதவ் மற்றும் அவரது உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் சட்டமன்றத் தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர் மிஸ்டரி லால் யாதவ். கடந்த 2019 ஆம் ஆண்டு ஒருவர் மிஸ்ரி யாதவ் மற்றும் அவரது உதவியாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தன்னை மிரட்டி பணம் பறித்ததாக அதில் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து எம்எல்ஏ மிஸ்ரி யாதவ் மற்றும் அவரது உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம் எல் ஏ நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கிறேன். ஆனால் தீர்ப்புக்கு எதிராக பாட்னா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று கூறினார். எம்எல்ஏவுக்கு எதிரான நீதிமன்ற உத்தரவின் நகல் கிடைத்தவுடன் அவரை தகுதி நீக்கம் செய்வதற்கான செயல்முறை தொடங்கப்படும் என்றும் தெரிகிறது.