பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சுஷ்மிதா சென். இவருக்கு அண்மையில் மாரடைப்பு ஏற்பட்டதால் ஆஞ்சியோபிளாஸ்டி செய்திருக்கிறார்கள். இதற்கு முன்பு ஹார்மோன் பிரச்சனையின் காரணமாக சுஷ்மிதா சென் 8 மணி நேரத்திற்கு ஒருமுறை ஸ்டெராய்டு எடுத்து வந்துள்ளார். நடிகை சுஷ்மிதாவுக்கு தற்போது 47 வயது ஆகும் நிலையில் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர்  ரினி மற்றும் அனிஷா என்ற இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் நடிகை சுஷ்மிதா சென் உலக அழகி போட்டி பற்றி பேசிய விஷயம் வைரலாகி வருகிறது. அதாவது கடந்த 1994-ம் ஆண்டு இந்தியாவுக்கு உலக அழகி மற்றும் பிரபஞ்ச அழகி பட்டங்கள் கிடைத்தது.

சுஷ்மிதா சென் பிரபஞ்ச அழகியாகவும், ஐஸ்வர்யா ராய் உலக அழகியாகவும் தேர்வு செய்யப்பட்டார்கள். இந்நிலையில் சுஷ்மிதா முதலில் மிஸ் இந்திய அழகி போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்றபோது ஐஸ்வர்யா ராயின் அழகை பார்த்து பயந்துவிட்டாராம். ஐஸ்வர்யா ராய் இருக்கும்போது கண்டிப்பாக தன்னால் வெற்றிபெற முடியாது என்று கூறி போட்டியிலிருந்து விலகுவதாக தன் அம்மாவிடம் கூறியுள்ளார். ஆனால் அவரின் அம்மா சுஷ்மிதாவை திட்டி யார் அழகாக இருந்தால் என்ன உன் மீது நம்பிக்கை வைத்து கலந்து கொள் என்று கூறினாராம். அதன்பிறகே சுஷ்மிதா தைரியமாக போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அந்த போட்டியில் சுஷ்மிதா மிஸ் இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அதோடு பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையையும் சுஷ்மிதா சென் பெறுவார்.