தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பெங்களூரில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தின் போது 11 பேர் நெரிசலில் சிக்கி இறந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அதில் ஒருவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த காமாட்சி என்பது மிகவும் வேதனை அளிக்கிறது. கர்நாடகாவில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் சரியான ஏற்பாடுகளை செய்யாததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

பாமக-வில் நடக்கும் விவகாரம் அவர்களின் உட்கச்சி விவகாரம். அதை பேசுவது நாகரிகம் கிடையாது. அப்பா மகனுக்கு இடையே இருக்கும் பிரச்சனையை அவர்கள் தான் பேசி தீர்க்க வேண்டும். ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துறைச்சாமி ஆகியோர் தனிப்பட்ட முறையில் பாமக தலைவர் ராமதாஸை சந்தித்துள்ளனர். அதற்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சமாதானம் அனைத்து இடங்களிலும் இருக்க வேண்டும். அனைவரும் ஒர் அணியில் இருந்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். இதற்காக தவெக தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.