உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில், பாரத் 24 சேனலின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஷாஜியா நிசார் மற்றும் அமர் உஜாலா டிஜிட்டல் விங் தொகுப்பாளர் ஆதர்ஷ் ஜா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் பத்திரிகையாளர்கள் என்றாலும், அவர்கள்மீது 3 தனித்தனி எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, பாரத் 24 சேனலின் நிர்வாக இயக்குநர் ஜெகதீஷ் சந்திரா, ஆலோசனை ஆசிரியர் அனிதா ஹடா மற்றும் மனிதவளத் தலைவர் அனு ஸ்ரீதர் ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில், ஷாஜியா மற்றும் ஆதர்ஷ் மீது “மிரட்டல், பணம் பறித்தல், மற்றும் பொய்யான பாலியல் குற்றச்சாட்டுகள் கூறி பணம் பறிக்கும் முயற்சி” போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த புகாரில், இருவரும் பாரத் 24 சேனல் மேலாளர்களிடம் ₹65 கோடி வரை நஷ்டஈடு கேட்டு, கொடுமையான அடிதடி நடத்தியும், புகழ் சேதமும் ஏற்படுத்துவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

அந்த புகாரின் பேரில் போலீசார் ஷாஜியா நிசாரின் வீட்டில் சோதனை நடத்தி, ரூ.34 லட்சம் பணத்தைக் கைப்பற்றியுள்ளனர். இதன் பின்னர், இருவரும் கௌதம் புத்த நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாரத் 24 இயக்குநர் ஜெகதீஷ் சந்திரா கூறியதாவது, “ஷாஜியா நிசார் என்னை மட்டுமல்லாமல், ஆசிரியர் உமர், அனிதா ஹடா மற்றும் பல மேசை ஊழியர்களையும் மிரட்டியுள்ளார். எல்லோரும் தொடர்ந்து இதை பார்த்து சலித்துப் போனார்கள்” என தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே, பாரத் 24 நிர்வாகம் ஷாஜியா நிசாரை வேலையில் இருந்து நீக்கியது. முன்னதாக, ஷாஜியா ரிபப்ளிக் பாரத்தில் பணிபுரிந்தபோது ரஷ்யா-உக்ரைன் போர் செய்திகளை மிகவும் நாடக பாணியில் வழங்கி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஆதர்ஷ் ஜா கைது சம்பந்தமாக, அவரது நிறுவனம் அமர் உஜாலா இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை. இந்த சம்பவம், ஊடகவியலுக்குள் உள்ள சிலரின் போக்குகள் பற்றி கேள்விகளை எழுப்பும் வகையிலும், ஊடகத்தின் நம்பகத்தன்மை குறித்து விவாதங்களை தூண்டும் வகையிலும் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.