திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிராஞ்சேரி கீழத்தெருவை சேர்ந்தவர் சீதாராமன் (31). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள ஒரு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் சீதாராமன் மீது முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் சீதாராமனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது அந்த வழக்கின் விசாரணை நீதிபதி சுரேஷ்குமார் அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது.

அந்த வழக்கை முழுவதுமாக விசாரித்த நீதிபதி குற்றவாளி சீதாராமனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 5000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனை அடுத்து அந்த வழக்கில் திறம்பட விசாரணை செய்து சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி சத்யராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி மற்றும் முன்னீர்பள்ளம் காவல்துறையினர் மற்றும் வழக்கை திறம்பட வாதாடிய அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் பாராட்டினார்.