கேரள மாநிலம் வயநாடு, காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வனப்பகுதிக்கு அருகில் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இதனால் அவ்வபோது சிறுத்தை, புலி, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்புக்குள் புகுந்து விடுகின்றனர். இதனால் மலையோர வசிக்கும் கிராம மக்கள் அச்சத்துடன் வாழக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காசர்கோடு கல்லடசீட்டா பகுதியை சேர்ந்த விகாஸ் நம்பியார் டெல்லியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனால் கல்லடசீடாவில் உள்ள இவரது வீட்டை கிரிஷ் என்பவர் பராமரித்து வருகிறார்.

இந்நிலையில் விகாஸ் நம்பியார் தனது வீட்டில் பாதுகாப்புக்காக வளர்க்கப்பட்ட நாயை  காணவில்லை. அதனை கிரிஷ் தேடிய போது, சற்று தொலைவில் எஸ்டேட் பகுதியில் நாயின் ஒரு கால் பகுதி துண்டாக கிடந்தது. ஏதோ விலங்கு கொன்றிருப்பதை யோகித்த அவர், டெல்லியில் உள்ள விகாஸ் நம்பியாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள வீடியோவை டெல்லியில் இருந்தவரை பார்த்துள்ளார்.

அப்போது ஒரு நாள் இரவில் சிறுத்தை ஒன்று நாய் இருந்த பகுதியில் நடந்து சென்றதும், அதற்கு மறுநாள் வீட்டின் மாடியில் சிறுத்தை நின்றதும் பதிவாகியுள்ளது. இதனால் ஒரு சிறுத்தை அப்பகுதியில் தொடர்ந்து நடமாடுவது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் சிசிடிவி காட்சிகளும் வனத்துறையினருக்கு அனுப்பியுள்ளனர்.

அதன்படி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டு இருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.