விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கத்தில் இருக்கும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை என இரண்டு ஷிப்டுகளாக செயல்படுகிறது. கடந்த சில மாதங்களாக காலை நேரங்களில் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் தாமதமாக வருகின்றனர்.

இதனால் கல்லூரி முதல்வர் குறித்த நேரத்திற்கு மாணவர்கள் கல்லூரிக்கு வரவில்லை என்றால் கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஏற்கனவே எச்சரித்துள்ளார். ஆனாலும் மாணவர்கள் தாமதமாக கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர். நேற்று காலை 10:30 மணிக்கு கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகளை பேராசிரியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. மேலும் கல்லூரியின் நுழைவு வாயில் கதவும் இழுத்து மூடப்பட்டது.

அவர்களிடம் பெற்றோர்கள் மிகவும் கஷ்டப்பட்டு படிக்க அனுப்புகிறார்கள். வகுப்புகள் நடப்பதே 2,3 மணி நேரம் தான். அதிலும் தாமதமாக வந்தால் எப்படி பாடத்தை படிப்பீர்கள்? என பேராசிரியர்கள் கேட்டுள்ளனர். மேலும் இனிவரும் காலங்களில் சரியான நேரத்திற்குள் கல்லூரிக்கு வர வேண்டும் என அறிவுரை கூறி மாணவ, மாணவிகளை கல்லூரிக்குள் அனுமதித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.