கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏந்தல் கிராமத்தில் ராஜகுருநாதன் என்பவருக்கு சொந்தமான நிலம் அரச களத்தூர் கிராம எல்லையில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் கூலி வேலை பார்க்கும் பெரியசாமி, மணிகண்டன், காமராஜ், ராஜேந்திரன் ஆகியோர் ராஜகுருநாதனின் விவசாய நிலத்திற்கு வேலைக்கு சென்றனர். அங்கு மது குடித்துவிட்டு போதையில் மின் மோட்டாரில் இருந்து ஒயர் மூலம் மின்சாரம் எடுத்து அருகில் இருக்கும் மயூரா ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பெரியசாமி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை பார்த்ததும் என்ன செய்வது என்று அறியாமல் ராஜகுருநாதன், மணிகண்டன், காமராஜ், ராஜேந்திரன் ஆகிய 4 பேரும் பெரியசாமி உடலை முட்புதரில் மறைத்து வைத்து விட்டு அங்கிருந்து சென்றனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் காமராஜ், ராஜேந்திரன்  ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். ராஜகுருநாதன், மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.