
திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். கடந்த நாட்களில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியும், தெய்வத்தமிழ் பேரவையும் இணைந்து திருச்செந்தூரில் அறப்போராட்ட பொதுக்கூட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னணியில், திருக்கோயில் நிர்வாகம் தமிழ்முறையில் திருமுறை முற்றோதல் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டதையும், அதனை “தமிழ் குடமுழுக்காக” அரசியல் ஏமாற்று அறிவிப்பாகக் கூறி சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் “தமிழிலும் குடமுழுக்கு நடைபெறும்” என்ற கருத்தை சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். “தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பது பிச்சை அல்ல; அது தமிழர் உரிமை,” என அவர் வலியுறுத்தினார். திருச்செந்தூர் கோவில் தமிழ்நாட்டில் இருக்கிறது, இது வேறு மாநிலத்தில் அல்ல என கூறிய அவர், தமிழகத்தில் உள்ள கோவில்களில் தமிழ் வழிபாடே முக்கியமாக இருக்க வேண்டுமென்றார்.
“திருப்பதி, சபரிமலை, மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில்களில் தமிழில் குடமுழுக்கு வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. ஆனால் தமிழர்கள் கட்டிய கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்தப்படவேண்டும்” என்றார். கோபுர கலச நன்னீராட்டின் போதும், வேள்விச்சாலையில் மந்திர ஓதலின் போதும் தமிழ் மந்திரங்கள் முழுமையாக ஒலிக்க வேண்டும் என்றும், குறைந்தபட்சம் சமஸ்கிருதத்திற்கேற்ப தமிழுக்கும் சமவாய்ப்பு வழங்கப்படவேண்டும் என சீமான் வலியுறுத்தினார்.
தமிழில் முற்றோதல் செய்து அதை முழு குடமுழுக்காக ஏமாற்றும் அரசு நடவடிக்கையை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும், தமிழ்நாடு உயர்நீதிமன்ற தீர்ப்பின்படியே அனைத்து கோவில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படவேண்டும் எனவும் கூறியுள்ளார். தமிழ் மொழி, பண்பாடு, வரலாறு மற்றும் அறநெறியுடன் கூடிய வழிபாட்டு முறைகள் தமிழகத்தில் நிலவ வேண்டுமென்பதே தம் கட்சியின் கோரிக்கையாகும்.
இதனை ஏற்காதபட்சத்தில், நாம் தமிழர் கட்சி திட்டமிட்டபடி அறப்போராட்டங்களைத் தொடரும் என்றும், தமிழக அரசால் தமிழ் இனம் எதிர்கொள்ளும் இழிவை அனுமதிக்கமாட்டோம் என்றும் சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.