கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் செய்த மிகப்பெரிய தவறு குஜராத் அணிக்கு மரண அடியாக மாறியுள்ளது. கேகேஆர் அணியின் அதிரடி வீரர் ஃபின் ஆலன் கொடுத்த மிக எளிமையான கேட்ச் வாய்ப்பை, லாங் ஆன் திசையில் நின்றிருந்த சிராஜ் கோட்டை விட்டார். ஏற்கனவே ஜேசன் ஹோல்டர் கொடுத்த ஒரு வாய்ப்பை நழுவ விட்டிருந்த நிலையில், சிராஜ் செய்த இந்த சொதப்பல் குஜராத் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

​முகமது சிராஜ் இந்த கேட்ச்சை விட்டபோது ஃபின் ஆலன் 33 ரன்களுடன் களத்தில் இருந்தார். தனக்கு கிடைத்த இந்த அதிர்ஷ்டத்தை மரண மாஸாக பயன்படுத்திய ஆலன், சிராஜின் கையை விட்டு பந்து நழுவிய அடுத்த சில நிமிடங்களிலேயே ருத்ரதாண்டவம் ஆடி, மின்னல் வேகத்தில் அரைசதம் அடித்து கொல்கத்தா அணியை அசைக்க முடியாத பலமான நிலைக்கு கொண்டு சென்றார். சிராஜின் இந்த சுலபமான கேட்ச் மிஸ், தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி, இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.