உத்திரபிரதேசம் மாநிலம் பண்டா பகுதியில் சங்கர் உபாத்யாய் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமணம் செய்து கொள்வதற்காக பெண் தேடி வந்துள்ளார். அப்போது இவருக்கு விமலேஷ் என்ற நபர் அறிமுகமாகி, தனக்கு தெரிந்த வரன் ஒன்று இருப்பதாக கூறியுள்ளார். அதோடு திருமண ஏற்பாடுகளை செய்ய 1.5 லட்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். அதன்படி பூனம் மிஸ்ரா என்ற பெண்ணை அறிமுகம் செய்ததோடு, உடனடியாக 1.5 லட்சம் தருமாறு விமலேஷ் வற்புறுத்தியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சங்கர், பூனம் மற்றும் அவரது தாயாரின் ஆதார் கார்டை கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

இதனால் சங்கர் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் அவர்கள் சங்கரை மிரட்டியதால், தனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்று கூறி அவர்களிடம் இருந்து தப்பி, காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அதன்படி காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், அந்த கும்பலின் மோசடிகள் அனைத்தும் வெளிவந்தது. அதாவது பூனம் மிஸ்ரா என்ற பெண் இதுவரை 6 ஆண்களை திருமணம் செய்து உள்ளதாகவும், அவருக்கு தாயாக சஞ்சனா குப்தா என்ற பெண் நடித்துள்ளார். இதை தவிர விமலேஷ் வர்மா மற்றும் தர்மேந்திர பிரஜாபதி ஆகியோர் திருமணத்திற்கு வரம் தேடும் இளைஞர்களை குறி வைத்து வலையில் சிக்க வைத்துள்ளனர்.

இவர்களின் திட்டப்படி முதலில் பூனம் மிஸ்ராவுக்கும், அந்த இளைஞருக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர். அப்போது திருமணச் செலவுக்கு என்று கூறி ரொக்கமாக பணத்தை பெற்றுக் கொள்கின்றனர். திருமணம் முடிந்த பிறகு பூனம் அவர்களது வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி செல்கின்றார். இவ்வாறு 6 ஆண்களை ஏமாற்றிய நிலையில், தற்போது 7வது முறையாக ஏமாற்ற முயற்சி செய்யும் போது காவல்துறையினரிடம் சிக்கி உள்ளனர். இது தொடர்பாக தற்போது 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.