பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் மக்களவை செயலகமானது அவரது எம்பி பதவியை பறித்தது. இதையடுத்து ராகுல் அரசு பங்களாவை காலி செய்ய சொல்லி, நோட்டீசும் அனுப்பப்பட்டது. இருந்தாலும் கோர்ட்டின் இத்தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதனிடையே அவருக்கு எதிராக அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி உட்பட 600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்தும், தமிழ்நாடு வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து சட்ட விரோதமாக கூடுதல், சென்னை காவல் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.