ஒரு நாள் டெலிவரிபாயாக மாறிய “தி வைப்ஸ் நெட்வொர்க்” நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் சல்மான் சலீம் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் அந்தப் பதிவில் தெரிவித்ததாவது, ஒரு நாளுக்காக BLINKIT  டெலிவரி பாயாக வேலை செய்த போது வாழ்க்கையை புரிந்து கொள்ள தேவைப்படும் மிகப்பெரிய பாடமாக அமைந்தது என தெரிவித்திருந்தார். மேலும் வேலை மதிப்பு, கண்ணியம் ஆகியவற்றை பார்க்கும் விதம் முற்றிலும் மாறிவிட்டது எனவும் கூறினார்.

ஸ்கூட்டரில் செல்லும்போது அவசரமாக மளிகை பொருட்களை 10 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் டெலிவரி செய்வது எப்படி இருக்கும் என்பதை உணர்ந்துள்ளேன். நான் என் ஆர்டரை பெற்றுக் கொண்டு அதை டெலிவரி செய்ய ஓடிய போது வெப்பத்தையும், குழப்பமான போக்குவரத்தையும் எதிர்த்து போராடிய போது இந்த வேலை வெறும் வேகத்தை பற்றியது மட்டுமல்ல என்பதையும் உணர்ந்தேன்.

blinkit செயலி டெலிவரி நபர்களை “டெலிவரி பார்ட்னர்கள்” என அழைத்தாலும், இந்த சமூகம் அவர்களை பெரும்பாலும் ஒரு அடிமட்ட தொழிலாளியாகவே பார்க்கிறது. பலரும் அலட்சியம், விரோதம் மற்றும் விலக்கு ஆகியவற்றால் தினம் தோறும் பாதிக்கப்படுகின்றனர். சமத்துவம் பற்றியும், சமூக நீதிப் பற்றியும் சமூக வலைதளங்களில் பேசுபவர்கள் ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து கொண்டு டெலிவரி தொழிலாளர்களை பிரதான லிப்ட்களை பயன்படுத்துவதை தடை செய்கின்றனர். படிக்கட்டுகளில் ஏற சொல்கின்றனர்.

சில நேரங்களில் நான்காவது மாடி வரை அல்லது சர்வீஸ் லிப்டை பயன்படுத்தவும் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இச்சம்பவம் ஒரு நாளில் ஒரு முறை, இரண்டு முறை அல்ல கிட்டத்தட்ட ஒவ்வொரு முறையும் இவ்வாறு நடைபெறுகிறது. டிஜிட்டல் உலகில் சாதி வெறி மற்றும் இனவெறிக்கு எதிராக தினம் தோறும் சமூக வலைதளங்களில் பதிவிடும் அதே நபர்கள் தான் டெலிவரி தொழிலாளர்களை உடல்ரீதியாக துன்புறுத்தவும், மனரீதியாக பாதிப்படைய செய்பவர்களாக உள்ளனர்.

ஏதோ இரண்டாம் தர பணியாளர்கள் போல டெலிவரி செய்பவர்களை போக்குவரத்து போலீசார் முதல் சாலையில் ஒரு அங்குலம் கூட இடம் கொடுக்காமல் SUV காரில் செல்லும் உரிமையாளர்கள் வரை இழிவாக நடத்துகின்றனர். டெலிவரி வேலை செய்பவர்கள் ஏழ்மையானவர்கள் படிக்காதவர்கள் என்று அனைவரும் நினைக்கிறார்கள்.

ஆனால் டெலிவரி செய்யும் நபர்களில் பலர் மாணவர்கள், கலைஞர்கள் அல்லது கண்ணியத்துடன் வாழ்க்கை நடத்த வேண்டும் என முயற்சிப்பவர்கள் இது அவ்வளவு பெரிய குற்றமா?. BLINKIT, ZEPTO, SWIGGY   போன்ற நிறுவனங்கள் விநியோகத்திற்கு அப்பால் இது போன்ற அடிப்படை மரியாதை மறுக்கப்படும் தொழிலாளர்கள் தினம் தோறும் எதிர்கொள்ளும் இன்னல்களை குறித்து விழிப்புணர்வில் ஈடுபட வேண்டும் என பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவு சமூக வலைதளங்களில் ஏராளமான பார்வையாளர்களையும்,கருத்துக்களையும் பெற்று வைரலாகி வருகிறது.