
தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி சமூகநீதி விடுதிகள் என்று அழைக்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இதையடுத்து மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள பகுதியில் அரசு மாணவர் விடுதியில் இன்று காலை உணவு அருந்திய 15 மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் சமூக நீதி விடுதிகள் என்ற பெயர் மாற்றி மூன்று நாட்களிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. திமுக ஆட்சி வரும் விளம்பர மாடல் ஆட்சி என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, மதுரை, உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டி அரசு மாணவர் விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 15 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
சமூகநீதி விடுதிகள் என பெயர்மாற்றம் செய்து மூன்று நாட்களுக்குள்ளேயே இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது திமுக ஆட்சி வெறும் விளம்பர மாடல் ஆட்சி என்று தெள்ளத்தெளிவாக உணர்த்திவிட்டது. எனவே, இனியும் எத்தனை பெயர்சூட்டு விழாக்கள் நடத்தினாலும், மேடைகளில் முழங்கினாலும் மாணவர்கள் நலனில் அக்கறை கொள்ளாத திமுக அரசை இன்னும் சில மாதங்களில் தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக தூக்கியெறிவர் என்பது திண்ணம்! என்று கூறியுள்ளார்.