
கர்நாடக மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் சுற்றுப்புறங்களுக்கு மத்தியில் தமிழ்நாட்டின் எல்லைக்கு அருகில் பந்திப்பூர் தேசிய பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் பலவகையான பறவைகள் மற்றும் விலங்குகள் காணப்படுகின்றன. இந்தப் பூங்காவின் சுற்றுப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக செல்ல ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பந்திப்பூர் சந்திப்பு தேசிய நெடுஞ்சாலையில் காட்டுயானை ஒன்று நடமாடிக் கொண்டிருந்தது. இதனை படம் பிடிப்பதற்காக யானையின் முன் சென்று இளைஞர் ஒருவர் யானைக்கு இடையூறு செய்யும் வகையில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இதனை அடுத்து யானையை துன்புறுத்திய குற்றத்திற்காக வனத்துறை அந்த இளைஞருக்கு ரூபாய் 25,000 அபராதம் விதித்துள்ளது.