ஜூன் 15 ஆம் தேதி, உத்தரப்பிரதேசத்தில் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ் வீதியில், ஒரு ஜோடி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தபோது எடுத்த ஆபத்தான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் மோட்டார் சைக்கிளின் டாங்கில் மிகவும் ஆபத்தான முறையில் உட்கார்ந்திருப்பது காணப்பட்டது. அவர் தனது காதலனை கட்டி அணைத்துக்கொண்டு சென்றதும், காதலன் ஹெல்மெட் அணியாததும் தெளிவாக பதிவாகியுள்ளது.

 

இந்த செயல், மோட்டார் வாகன சட்ட விதிமீறல் மட்டுமல்லாது, பொதுவெளியில் ஒழுங்குக்கேடான செயல் என்றும் போலீசார் கருதியுள்ளனர். வீடியோ இணையத்தில் பரவியதும் நொய்டா போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இருசக்கர வாகனத்தின் மீது மொத்தமாக ரூ. 53,500 அபராதம் விதித்தது. இது பல்வேறு வாகன விதிமீறல்களுக்கான அபராதமாக விதிக்கப்பட்டது.

இது போன்ற செயல்கள் பொதுவெளியில் மக்கள் பாதுகாப்பை குழப்பும் வகையிலும், சாலை விதிகளை மீறி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இனி இதுபோன்று சட்டவிரோதமாக ஸ்டண்ட் செய்யும் நபர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சாலை விதிகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டியது அவசியம் எனவும் நொய்டா போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.