ராஜஸ்தான் மாநிலம் ஹனுமான்கரில் ஆண்டுதோறும் நடைபெறும் கோகாமேடி திருவிழாவின்போது (Gogamedi Mela), தன்  ஒட்டகத்தை அதன் உரிமையாளர் கொடூரமாகத் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பொதுமக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில், ஒட்டகம் வலியால் துடித்துப் படுத்திருக்க, அதன் உரிமையாளர் இரக்கமின்றி ஒரு பெரிய கம்பால் அதன் கழுத்து மற்றும் உடல் பகுதியில் மாறி மாறித் தாக்குவதைக் காணலாம்.

தாக்குதலுக்கு ஆளான ஒட்டகம், பயத்தில் தனது கழுத்தைச் சற்றுத் தரையை நோக்கித் தாழ்த்தி, தாங்க முடியாத வலியுடன் காணப்படுகிறது.

ஆனால், அதன் உரிமையாளருக்குச் சிறிதும் இரக்கம் வரவில்லை. இந்த உணர்ச்சிப்பூர்வமான காட்சியைப் பார்த்த பலரும் கொந்தளித்து, விலங்குகளை இப்படி வதைப்பது கண்டிக்கத்தக்கது என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோ 1.94 லட்சம் பார்வைகளைக் கடந்து வைரலாகி வரும் நிலையில், விலங்கு நல அமைப்பான ‘பெட்டா இந்தியா’ (PETA India)-வும் இந்தச் சம்பவத்தைக் குறித்துக் கவலை தெரிவித்து, குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவரங்களைக் கேட்டுள்ளது.