
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் ஒன்றாக தங்கி இருந்தபோது சந்தித்து பேசியுள்ளனர். அந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்ததாக கூறப்படுகிறது.
தற்போது திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்டு வருவதாக கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகை செல்வனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது, “அதிமுக கூட்டணி நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. பலரும் வர உள்ளனர். திமுக கூட்டணியில் தற்போது ஓட்டை விழுந்துள்ளது போகப் போக என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்”என கூறினார்.
இந்நிலையில் திருமாவளவனிடம் வைகைசெல்வன் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது, “ஒரு நிகழ்ச்சியில் அறிமுகமானோம். அதன் பின் நட்பின் அடிப்படையில் தான் வைகை செல்வனை சந்தித்து பேசினேன். அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை”என தெரிவித்தார்.
மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் “தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு இடமே இல்லை என்பதுதான் வரலாறு. மதத்தின் பெயரால் பிரச்சனையை ஏற்படுத்த பலரும் முயற்சித்து வருகின்றனர்.
மேலும் திருப்பரங்குன்றத்தில் இந்து- முஸ்லிம்களுக்கு இடையே எந்தவித முரண்பாடுகளும் இல்லை. மத்திய தொல்லியல் துறை தமிழர்களை அணுகும் முறை வன்மையாக கண்டிக்கத்தக்கது” எனவும் கூறினார்.