கடந்த மாதம் ஈரானில் காணாமல் போன இந்தியர்கள் மூவர் தற்போது பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் சங்ரூர், ஹோஷியார்பூர் மற்றும் எஸ்.பி.எஸ் நகர் பகுதிகளில் இருந்து ஹுஷன்பிரீத் சிங், ஜஸ்பால் சிங், அம்ரித்பால் சிங் என்ற மூவர் ஈரானுக்கு பயணித்திருந்தனர். ஆனால் அவர்கள் அந்த நாட்டுக்கு சென்ற பிறகு சில நாட்களில் திடீரென காணாமல் போனதாக தகவல் வெளியாகி, அவர்களது குடும்பங்களில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

 

இதைத் தொடர்ந்து, இந்திய தூதரகம் ஈரானில் உள்ள அதிகாரிகளுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டது. அவர்களை கடத்தல்காரர்கள் கடத்தியுள்ளதாகவும், அவர்களை விடுவிக்க பணம் கோரியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த சந்தேகத்தை மையமாக வைத்து, அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, பல்வேறு தகவல்களை சேகரித்து வந்தனர்.

முன்னதாக ஒரு மாதம் காணாமல் போன அந்த மூவரும், தற்போது தெஹ்ரான் நகரத்தில் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளனர். இந்திய தூதரகம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. அவர்கள் அனைவரும் நலமாக இருப்பதாகவும், தற்போது இந்திய அதிகாரிகளின் பாதுகாப்பில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த மீட்பு, அவர்களின் குடும்பத்தினருக்கு பெரிய நிம்மதியாக அமைந்துள்ளது.