
மராட்டிய மாநிலம் புனேவில் ஜிபிஎஸ் எனப்படும் கில்லெயின்-பார்ரே சிண்ட்ரோம் என்ற நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. இது குறித்து மராட்டிய சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் கூறியதாவது, மொத்தம் 192 பேருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 167 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இதுவரை இந்த மர்ம நோயால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் ஒருவருக்கு இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு, மற்ற 6 பேரின் நிலையும் சந்தேகத்தின் அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 48 நோயாளிகள் icu-வில் வைக்கப்பட்டு உள்ளனர். 21 பேருக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 91 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீட்டை திரும்பி உள்ளனர். மாசுபட்ட தண்ணீரால் இந்த நோய் தொற்று பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் நரம்பு மண்டலம் பாதிக்க தொடங்கி, தசை பலவீனம் மற்றும் முடக்கம் போன்ற பல்வேறு அறிகுறிகளும் ஏற்படுகின்றனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.