நேபாளத்தில் உள்ள போஹாரா மாவட்டத்தைச் சேர்ந்த சுஷ்மிதா சரு மஹர் என்ற இளம் பெண் வேலைக்காக இந்தியாவில் உள்ள உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் பரடரி பகுதி வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் வாடகைக்கு தங்கி உள்ளார். கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி இரவு 1 மணி அளவில் செல்போன் பேசுவதற்காக அவரது வீட்டில் மொட்டை மாடிக்கு சென்றுள்ளார்.

அங்கு போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் சுஷ்மிதாவை திருட வந்த பெண் என நினைத்து அவரை பிடிக்க முயற்சித்துள்ளனர். மேலும் அந்த கும்பல் சுஷ்மிதாவை மிரட்டும் வகையில் கத்தி கூச்சலிட்டதால்  பயந்துபோன சுஷ்மிதா மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

அதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அந்த கும்பல் விடாமல் சுஷ்மிதாவை மடக்கிப்பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து கட்டைகளால் அடித்து துன்புறுத்தினர். அதனால் அலறிய சுஷ்மிதா நான் திருடவில்லை இந்த பகுதியில் வாடகைக்கு வசித்து  வருவதாக கூறியுள்ளார்.

இருந்தும் அதனை ஏற்க மறுத்த அந்த கும்பல் சுஷ்மிதாவை மேலும் தொடர்ந்து தாக்கியது இச்சம்பவத்தால் சுஷ்மிதா பலத்த காயமடைந்தார். இதுகுறித்து காவல்துறைக்கு வந்த தகவலின்படி விரைந்து வந்த காவல்துறையினர் சுஷ்மிதாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் சுஷ்மிதா அளித்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இச்சம்பவத்தில் ஈடுபட்ட கௌரவ் சக்சேனா, சிவம் சக்சேனா, அமன் சக்சேனா, அருண் சைனி ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் சிலர் தலைமுறைவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அவர்களை தீவிரமாக தேடும் பணியிலும் காவல்துறையினர் இறங்கியுள்ளனர். சுஷ்மிதாவை கொடூரமாக தாக்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.