
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காவ்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 11ஆம் தேதி அன்று இவர் கைக்கொண்டனஹள்ளி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது எலக்ட்ரானிக் சிட்டிக்கு செல்லும் அரசு பேருந்து வந்தது. இதில் ஏறிய காவ்யா எலக்ட்ரானிக்ஸ் சிட்டி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு டிக்கெட் எடுத்தார். இந்த பேருந்தை உசேன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். கண்டக்டராக முரளி மோகன் இருந்துள்ளார்.
எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் தான் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தம் வந்ததும் கண்டக்டரிடம் நிறுத்தும்படி கூறியுள்ளார். அதன்படி கண்டக்டர் விசில் அடித்தும் டிரைவர் பேருந்தை நிறுத்தவில்லை. இதனால் கோவமடைந்த காவ்யா டிரைவரிடம் தகராறு செய்தார். மேலும் காலில் கிடந்த செருப்பை கழற்றி டிரைவரை சரமாரியாக தாக்கினார். இது குறித்து டிரைவர் உசேன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில் காவ்யா இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தம் அருகே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. அதனால் பேருந்தை நிறுத்த முடியவில்லை. அதற்கு அடுத்த நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தினேன். இதில் கோபமடைந்த காவ்யா என்மீது செருப்பால் தாக்கினார். இதனால் என்னால் பணி செய்ய முடியவில்லை. பயணிகளும் பாதிக்கப்பட்டன என்று தெரிவித்திருந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.