
மதுரை மாவட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, திமுக இருக்கும் வரை.. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை டெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது.
தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் எதிரிகளை இல்லை என்று ஆணவ குரலில் சொல்பவன் நான் அல்ல. எந்த காலத்திலும் எனக்கு ஆணவமோ மமதையோ வராது. என்னை பொறுத்த வரைக்கும் பணிவு தான் தலைமை பண்பை அடையாளம். வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்வோம் என சொல்வது உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையில் தான்.
அடுத்த ஆண்டு இதே நேரம் 7-வது முறையாக திமுக ஆட்சி அமைந்தது என்பதுதான் தலைப்புச் செய்தியாக இருக்க வேண்டும். அதற்கான வியூகங்களை வகுக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் கூறியதாவது, புதிதாக சிலர் நாங்கள்தான் மாற்று என்று இளைஞர்களை ஏமாற்ற வருகிறார்கள். அவர்களுக்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மதக்கலவரங்களை உண்டாக்குவார்கள். சாதி கலவரங்களை தூண்டுவார்கள். நம்முடைய பிள்ளைகளை படிக்க விட மாட்டார்கள். பிற்போக்குத்தனங்களில் நம்மை மூழ்கடிப்பார்கள், தொழில் வளர்ச்சி இருக்காது, இந்தி மொழி திணிப்பு, பன்னாட்டு திணிப்பு செய்து தமிழ்நாட்டின் தனித்துவத்தையே அழித்து விடுவார்கள் என்று கூறினார்.