தனியார் கல்லூரிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் என்னும் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்திவரும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். MBBS, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, சித்த மருத்துவம் போன்ற மருத்துவ படிப்புகளுக்கான நுழைவு தேர்வாக நீட் அமைந்துள்ளது.

இந்நிலையில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வில் கோவையில் வசித்து வரும் இந்திரஜா என்ற திருநங்கை 2 வது முறையாக நேற்று நீட் தேர்வை எழுதினார். இது குறித்து அவரிடம் பேசியபோது கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினேன். அதில் மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்காததால் தற்போது 2 வது முறையாக தேர்வு எழுதி இருக்கிறேன் என்று கூறினார்.

அதோடு மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்றும், மருத்துவ சேவை செய்ய விருப்பம் இருப்பதாக கூறிய அவர் தனக்கு திருநங்கைகளுக்கான இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருப்பதாக கூறினார். மேலும் தன்னைப் போன்ற திருநங்கைகள் அனைத்து துறைகளிலும் சாதிக்க வேண்டும் என்றும் கூறினார்.