திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே பொம்மனபட்டி கிராமத்தில் கடந்த மே 15 ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் வைகாசி திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

அதற்காக பொம்பனபட்டி கிராம முத்தாலம்மன், காளியம்மன், பகவதி அம்மன் கோயில்களில் திருவிழா களைகட்டியது. அப்பகுதியில் உள்ள பக்தர்கள் அனைவரும் மாவிளக்கு, அக்னிசட்டி, முளைப்பாரி என தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தி வந்தனர்.

இந்நிலையில் திருவிழாவை ஒட்டி அப்பகுதி பக்தர்கள் கோயில் கொடை விழா பேனர்களை ஆங்காங்கே வைத்திருந்தனர். அதில் பக்தர்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த வாக்காளர் அட்டை பேனர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது அந்த பேனரில் அந்தக் கோவிலில் உள்ள கடவுள்களின் பெயர்களை வைத்து வாக்காளர் அடையாள அட்டை போல வைத்திருந்தனர். இதனை விழாவிற்கு வரும் பக்தர்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

இதேபோன்று சென்ற ஆண்டும் ஆதார் அடையாள அட்டை போல அம்மன் படம் வைத்து பக்தர்கள் பேனர் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.