ஒடிசாவின் புரி மாவட்டத்தில் உள்ள பாலிஹர்ச்சண்டி கோவில் அருகே கடற்கரையில், 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தனது காதலனுடன் அங்கு அமர்ந்திருந்தபோது, உள்ளூர் இளைஞர்கள் குழு அவர்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்து, அவற்றை நீக்குவதற்கு பணம் கேட்டதாக காவல் கண்காணிப்பாளர் பிரதீக் சிங் தெரிவித்தார்.
பணம் கொடுக்க மறுத்ததால், குழுவில் இருந்த இரண்டு இளைஞர்கள் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனர், மற்றவர்கள் அவரது காதலனை தாக்கி மரத்தில் கட்டிவைத்தனர்.
இந்த கொடூர சம்பவம் சனிக்கிழமை மதியம் (செப்டம்பர் 13, 2025) நடந்தபோதிலும், புரி சதர் காவல் நிலையத்தில் திங்கட்கிழமை மாலையே புகார் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் மூன்று பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் இருவர் மாணவியை வன்கொடுமை செய்தவர்கள் என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
நான்காவது குற்றவாளியை பிடிக்க காவல்துறை தீவிரமாக தேடுதல் நடத்தி வருகிறது. இப்பகுதியின் முன்னாள் எம்எல்ஏவான மூத்த பிஜேடி தலைவர் சஞ்சய் தாஸ் பர்மா, பாஜக அரசு பாலிஹர்ச்சண்டி கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பிரபல சுற்றுலா தலங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
