
சென்னை மாவட்டத்தில் உள்ள புரசைவாக்கம் பகுதியில் கங்காதீசுவரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. அந்த விழாவில் இந்து சமய அறநிலைத்துறையால் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட 2 மரத்தேர்களின் பெருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் சாலை போக்குவரத்து மாற்றம் மற்றும் அங்கு செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் செயல்பட்டு வரும் கங்காதேஸ்வரர் மேல்நிலைப்பள்ளி, இ.எல். எம் பள்ளி, எம்.சி.டி.எம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எம்.சி.டி.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இவார்ட்ஸ் பள்ளி, அழகப்பா மேல்நிலைப்பள்ளி மற்றும் வெள்ளாளர் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளி ஆகிய 7 பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கோவிலின் நுழைவாயிலில் தொடங்கும் தேரோட்டம் கங்காதீசுவரர் கோவில் வீதி, டாக்டர் அழகப்பாசாலை, ஆடியப்பா தெரு, வெள்ளாளர் தெரு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சமூக விநாயகர் கோவில் சந்திப்பு ஆகிய பகுதிகளைக் கடந்து கோவிலின் நுழைவாயில் வரை வந்து முடிவடைகிறது. அதனால் காலை 6:00 மணி முதல் மதியம் 1 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.