கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அனந்த நாடார் குடியிருப்பு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஆனந்த் (28). இவர் சென்னையில் பழக்கடை வியாபாரம் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்த ஆனந்த் மே 28ஆம் தேதி கோட்டார் பகுதியில் உள்ள அம்மன்குளம் தெருவில் மது போதையில் தனது உடல் மீது தானே தீ வைத்துக் கொண்டார்.

அதனால் உடல் முழுவதும் தீ பரவியதால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார் இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஆனந்தை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த ஜூன் 1ஆம் தேதி ஆனந்த் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதையில் இளைஞர் தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.