வரும் கல்வியாண்டில் 500 அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு தத்து கொடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, அரசு பள்ளிகளை தாரை வார்க்கிறோம் என்று பரவும் செய்தி தவறானது. அரசு பள்ளிகள் எங்கள் பிள்ளைகளை போல, அதை யாரும் தத்து கொடுக்கவில்லை. செய்திகளின் உண்மைத் தன்மை தெரியாமலேயே அரசியல் கட்சியினர் கண்டன அறிக்கை வெளியிடுகின்றனர்.

இந்த விவகாரத்தில் எனது தரப்பு விளக்கங்களை கேட்காமல், தேவையில்லாத பிரச்சினைகளை கிளப்பி அவசர அவசரமாக கண்டனம் தெரிவிக்கின்றனர். இவ்வாறு வெளியான செய்தியை நான் கண்டிக்கிறேன். சிஎஸ்ஆர் நிதி மூலம் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தனியார் பள்ளிகள் முன் வந்தது. அரசு பள்ளிகளை தத்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கல்வி நிதி விவகாரத்தில் மத்திய அரசு நிதி கொடுக்காமல், அவர்களது கொள்கைகளை ஏற்றுக் கொண்டால் தான் நிதி தருவோம் என்று மிரட்டுகின்றனர். எங்கள் கொள்கைகளில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். கல்வியை மாநில பாட்டியலுக்கு மாற்றி விடுங்கள், எங்கள் பிள்ளைகளை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்றார்.