சமூக வலைத்தளமான X-ல் வெளியாகி இருக்கும் ஒரு நெகிழ்ச்சியான காணொளி, இந்தியர்களின் மனிதாபிமானத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது. இந்தியா வந்த ஒரு வெளிநாட்டுப் பெண், இரவு 10 மணி அளவில் கூகுள் மேப் சரியாக வேலை செய்யாததால் வழிதெரியாமல் திகைத்து நின்றிருக்கிறார். முன்பின் தெரியாத ஊரில், தனிமையில் பயந்து போயிருந்த அந்தப் பெண்மணிக்கு ஒரு தேவதையாக வந்து உதவி செய்திருக்கிறார் ராபிடோ ஓட்டுநரான சிந்து குமாரி. கண்ணீருடன் கலங்கி நின்ற அந்தப் வெளிநாட்டுப் பெண்ணுக்கு ஆறுதல் கூறி, அவரைப் பத்திரமாக ‘ஹோட்டல் கோக்கனட்’-ல் கொண்டு போய் சேர்த்துள்ளார் சிந்து.

​இந்தச் செயல் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. சிந்து குமாரியின் இந்தச் செயலைப் பாராட்டும் நெட்டிசன்கள், இதுதான் உண்மையான இந்தியா என நெகிழ்ந்து போயுள்ளனர். ஆபத்தான நேரத்தில் ஒரு சகோதரியாக நின்று உதவி செய்த சிந்து குமாரியின் கனிவான குணம், அந்த வெளிநாட்டுப் பெண்ணின் மனதில் மட்டுமல்லாது, இந்த வீடியோவைப் பார்க்கும் அனைவரின் மனதிலும் ஒரு நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. மனிதாபிமானம் என்பது மொழிகளைக் கடந்தது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.