மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் உள்ள கோத்கிண்டி கிராமத்தில்  இஸ்லாமியர்கள் இந்துக்களுடன் இணைந்தது மசூதிக்குள்  விநாயகர் சதுர்த்தி கொண்டாடி மகிழ்கின்றனர். இது 1980ஆம் ஆண்டில் இருந்து “நியூ கணேஷ் மண்டல் குழு” சார்பில் கடந்த 44 ஆண்டுகளாக மசூதிக்குள் விநாயகர் சிலையை வைத்து 10 நாட்கள் பூஜை செய்து நீர் நிலைகளுக்கு எடுத்துச் சென்று கரைப்பார்கள். இஸ்லாமியர்களும் இந்துக்களும் ஒற்றுமையாக மத நல்லிணக்கத்துடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நியூ கணேஷ் மண்டல் குழு தலைவர் கூறுகையில் 1980 ஆம் ஆண்டு இந்த குழு அமைக்கப்பட்டு மசூதிக்குள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகிறோம். கடந்த 44 ஆண்டுகளாக விநாயகர் பூஜையில் எங்களுக்குள் எவ்வித பிரச்சனையும் வரவில்லை எனக் கூறியுள்ளார். அதேபோல கிராம மக்கள் மிகவும் அன்பாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதாக கூறினார்.

மேலும் இந்த கிராமத்தில் ரம்ஜான் நேரத்தில் இந்துக்களும் நோன்பு இருப்பார்கள். தீபாவளி, ரம்ஜான் ஆகிய பண்டிகைகளை இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒன்றாக கொண்டாடுவோம் என கிராம மக்கள் கூறியுள்ளனர். குறிப்பாக மற்றவர்களின் மதத்தை நாம் மதிக்க வேண்டும் என்பது நம்முடைய பாரம்பரியம், எங்களுக்குள் எவ்வித பிரச்சனையை வந்தாலும் நாங்களே பேசி தீர்த்துக் கொள்வோம் எனவும் அப்பகுதியினர் தெரிவித்தனர். எனவே இந்த கிராமம் மத நல்லிணக்கத்திற்கு சிறந்த உதாரணமாக விளங்கி வருகிறது.