
குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்குச் செல்ல திட்டமிடப்பட்ட விமானம், அகமதாபாத் விமான நிலையம் அருகே கடந்த 12ம் தேதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பயணிகளும், 10 பணியாளர்களும் இருந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி இந்த விமானத்தில் பயணித்து வந்தது குறிப்பிடத்தக்கது. விபத்தின் போது விமானம் ஒரு மரத்தில் மோதியதாக ஆரம்ப தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் மீட்பு குழுவினர் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக மொத்தம் 241 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இதைத்தொடர்ந்து பலி எண்ணிக்கை தற்போது 274 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்த விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 12ஆம் தேதி விமான விபத்து நடந்த நிலையில் டிஎன்ஏ பரிசோதனையின் மூலம் இன்று காலை அவரது உடல் அடையாளம் காணப்பட்டதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.