தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு  பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் விதமாக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ள நிலையில் தமிழ் புதல்வன் திட்டத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் அடுத்த மாதம் தொடங்குகிறது.

இந்த நிலையில் தமிழ் புதல்வன் திட்டத்திற்காக 360 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் தோராயமாக 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் மாதம் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான தகுதி விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களை தவிர்த்து இதர மாணவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது. தொலைதூர வழியில் அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் மற்ற மாநில பள்ளிகளில் படித்தவர்கள் இந்த திட்டத்தில் ஊக்கத்தொகை பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.