
தமிழ்நாடு அரசால் கட்டுமானத் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம், பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.
இதில் கல்வித் திட்டங்கள், திருமண நிதியுதவி, மகப்பேறு நிவாரணம், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், விபத்து நிவாரணம், இயற்கை மரணம் உள்ளிட்ட பலதரப்பட்ட நலப்பணிகள் அடங்கும்.
இந்த வாரியத்தின் மூலம், தமிழகம் முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பலனடைந்து வருகின்றனர். இந்நிலையில், கட்டுமான பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களுக்கு ஏற்படும் விபத்து மரணங்களில் வழங்கப்படும் நிவாரணத் தொகை முக்கிய பங்காற்றி வந்தது.
இதுவரை ரூ.5 லட்சம் வழங்கப்பட்ட இந்த நிவாரணத் தொகை, தற்போது ரூ.8 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.