பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படும் சம்பவம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடமும், வகுப்பு ஆசிரியரிடமும் நடந்தவற்றை கூறுகின்றனர். இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் மற்றும் பள்ளி ஊழியர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்தனர்.

மேலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தால் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என 23 பேரை பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 46 பேர் மீது விசாரணை நடந்த நிலையில் 23 பேர் மீது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் பணியில் இருந்து நீக்கி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.