
கடலூரைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் குவைத் நாட்டில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். மங்கலம்பேட்டையை சேர்ந்த முகமது யாசின், முகமது ஜூனைத் ஆகியோர் அறையில் குளிர் காய தீ மூட்டிய போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது. அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் 5 லட்சம் ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது குவைத் நாட்டில் ஓட்டுநர்களாக வேலை பார்த்து வந்த திரு.முகமது யாசின், திரு முகமது ஜூனைத் ஆகியோர் தங்கள் தங்கி இருந்த அறையில் கடும் குளிரிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தீ மூட்டி, நீண்ட இரவின் காரணமாக தீயை அணைக்காமல் அப்படியே உறங்கியதால் நெருப்பு அணைந்து ஏற்பட்டுப் புகையினால் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துள்ளனர் என்றும் மேற்படி இருவரின் உடல்களை கடந்த 22.1.2025 அன்று குவைத் நாட்டிலேயே உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்று துயரகரமான செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தல் ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.