பெஞ்சல் புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏரிகள் குளங்கள் நிரம்பி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மக்கள் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் சென்னை பனையூர் அடுத்த டிபி சத்திரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் நிவாரண உதவி வழங்கியுள்ளார். அவர் புயலால் பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களை தமிழக வெற்றி கழக தலைமை அலுவலகத்திற்கு வரவழைத்து நிவாரண உதவி வழங்கியுள்ளார்.