உத்திரபிரதேசம் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் டெல்லி நோக்கி பயணம் மேற்கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த டிசம்பர் 6ஆம் தேதி டெல்லி நோக்கி செல்ல முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் கண்ணீர் குண்டுகள் வீசி தடுத்து நிறுத்தினர். மத்திய அரசு கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்து முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். இன்று விவசாயிகள் மீண்டும் டெல்லி நோக்கி போராட்டத்தை தீவிர படுத்த முயற்சி செய்தனர்.

இதனை தடுக்கும் விதமாக அரியானா மாநில காவல்துறையினர் அம்பலாவில் உள்ள 12 கிராமங்களில் இணைய சேவையை முடக்கியது. இன்று முதல் டிசம்பர் மாதம் 17ஆம் தேதி வரை இணைய சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து 101 விவசாயிகள் குழு டெல்லி நோக்கி தங்களது போராட்டத்தை எடுத்து சென்று நிலையில் ஹரியானா- பஞ்சாப் எல்லையான ஷம்புவில் காவல்துறையினர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீச்சி அடித்து போராட்டத்தை தடுத்து நிறுத்த முயன்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.மேலும், இந்த போராட்டத்தில் பஜ்ரங் புனியா பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.