
சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் போலவே மர்ம நபர் ஒருவர் வலம் வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த ஜூன் 6-ம் தேதி அந்த நபர் தன்னை மருத்துவர் எனக் கூறி நோயாளிகளிடம் சிகிச்சை அளிப்பது போல பேசி உள்ளார்.
அப்போது ஒரு நோயாளியிடம் கேஷ் சீட்டுகளை வாங்கி சரி பார்த்து விட்டு காப்பீடு திட்டத்தில் உள்ளீர்களா? என கேட்டுள்ளார். பின்னர் ஸ்கேன் எடுக்க வேண்டும் எனக்கூறி நோயாளியை அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது ஸ்கேன் எடுக்க செல்லும்போது நகை போடக்கூடாது எனக்கூறி நோயாளிடமிருந்து நகைகளை வாங்கிய அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் விசாரித்தபோது அந்த நபர் போலி மருத்துவர் என தெரியவந்தது. பின்னர் பாதிக்கப்பட்ட நோயாளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில் மருத்துவர் போல நாடகமாடி தன்னுடைய 3 சவரன் நகை மற்றும் செல்போனை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளதாக தெரிவித்திருந்தார்.
அரசு மருத்துவமனையில் மருத்துவர் போல உடை அணிந்து கொண்டு வலம் வந்த நபரை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறிய காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் மருத்துவமனையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.