தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் “வாத்தி”. சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்துள்ள இந்த படம் நேரடியாக தெலுங்கிலும் “சார்” எனும் பெயரில் வெளியாகியது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கடந்த 17ம் தேதி இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில் வாத்தி படத்தை பாராட்டி இயக்குனர் பாரதிராஜா வெளியிட்ட வீடியோவில் “என் திரையுலக பயணத்தில் எத்தனையோ மைல்கல்களை தாண்டி வந்துள்ளேன். அப்போது சில இடங்களில் ஸ்தம்பித்து நின்று இருக்கிறேன்.

அப்படி என் பயணத்தின் போது ஸ்தம்பித்து நின்ற இடம்தான் வாத்தி. கல்வி இச்சமூகத்திற்கு எவ்வளவு தேவை என்பதை கூறுகிறது வாத்தி. இதற்கிடையே தனுஷ் என் பிள்ளை மாதிரி. அவன் பொழுதுபோக்குக்காக திரைப்படம் செய்தாலும் சமுதாய நோக்கத்திற்காக செய்கிறான். இப்படி ஒரு பிள்ளை கிடைப்பதற்கு திரை உலகம் தவம் செய்திருக்க வேண்டும். தனுஷ் நடிகன் மட்டுமல்ல எழுத்தாளன், பாடகன் சிந்தனை மனிதன்” என குறிப்பிட்டுள்ளார்.