கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புதூர் பகுதி அருகே பால விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. அங்கு சம்பவ நாளன்று காலையில் கோயில் குருக்கள் கோயிலை திறப்பதற்கு வந்துள்ளார். அவர் கோயில் கதவை திறந்ததும் கோவிலின் கருவறையின் கதவு உடைக்கப்பட்ட நிலையிலும், உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து கோவிலின் உண்டியலின் அருகே மது போதையில் ஒருவர் தூங்கிக் கொண்டிருப்பதை கவனித்த குருக்கள் உடனடியாக அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அங்கு கூடிய மக்கள் மது போதையில் கிடந்தவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதன் பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மது போதையில் கிடந்தவர் காரைக்கால் நெடுங்காடு பகுதியை சேர்ந்த சின்னையன் என்பது தெரியவந்தது. மேலும் அவர் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் விசாரணையில் வெளிவந்தது.

இந்நிலையில் கோவையில் உள்ள புதூருக்கு கட்டிட வேலைக்காக வந்தவர் அங்கு வாடகை வீடு ஒன்று எடுத்து தங்கி வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று கோவிலின் உண்டியலை உடைத்து 8,250 ரூபாய் திருடிவிட்டு கோவிலின் கருவறை கதவை கம்பியால் உடைத்து அங்கிருந்த பொருட்களையும் திருடி உள்ளார்.

அச்சமயத்தில் மழை பெய்ய தொடங்கியதால் மழை நின்றதும் கோவிலை விட்டு செல்ல நினைத்தவர் உண்டியலின் அருகே படுத்து உறங்கியுள்ளார். இச்சம்பவம் குறித்து கோவில் நிர்வாகி வெங்கடேஷ் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சின்னையனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.