
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நகர்ப்பகுதி நான்கு வழிச்சாலை அருகில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு கழுத்தில் பாம்பை சுற்றிக்கொண்டு இளைஞர் ஒருவர் மது வாங்க வந்துள்ளார். இதனைக் கண்ட கடைக்கு வந்த மது பிரியர்கள் பதறி அடித்து ஓடினர்.
செய்வதறியாது நின்ற கடை விற்பனையாளர்கள் அந்த இளைஞரை எச்சரித்து பீர் பாட்டில் ஒன்றை கொடுத்து அனுப்பி உள்ளனர். அதனை வாங்கிச் சென்ற இளைஞர் பாட்டிலை திறந்து பாம்பின் வாயில் ஊற்றியுள்ளார். பின்னர் அதனை தானும் குடித்துவிட்டு நான்கு வழிச்சாலை நடுவில் நடந்து சென்று அங்கு செல்லும் பொதுமக்களிடம் பாம்பை காட்டி மிரட்டி பயமுறுத்தியுள்ளார்.
அப்போது அந்த பகுதியில் நின்ற சிலர் பாம்புடன் அந்த நபர் செய்த செயல்களை செல்போனில் படம் பிடித்தனர். அதனைக் கண்ட இளைஞர் பாம்புடன் வித்தியாசமாக பல ஸ்டைலில் பாம்புக்கு முத்தம் கொடுப்பது, பாம்பையும், பீர் பாட்டிலையும் சாலையின் நடுவே வைப்பது போன்ற செயல்களை செய்தார்.
இது குறித்து அறிந்த காவல்துறையினர் அங்கு வந்து அந்த இளைஞரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் சாலையில் சில மணி நேரம் பதற்றம் ஏற்பட்டது.