கலிபோர்னியாவில் சினோ ஹில்ஸ் என்ற பகுதியில் BAPS ஸ்ரீ சுவாமி நாராயண் கோவில் அமைந்துள்ளது. தற்போது இங்கு மர்ம நபர்களால் இந்தியா எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது அமெரிக்காவில் இந்து கோவில்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதலில் ஒன்றாகும். ஏற்கனவே 5 மாதங்களுக்கு முன் இதே மாநிலத்தில் உள்ள மற்றொரு கோவில் மீதும் இது போன்ற தாக்குதல் நடந்துள்ளது.

அதாவது கோவில் சுவர்களில் “hindus go back” போன்ற இந்தியா எதிர்ப்பு வாசகங்கள் ஸ்ப்ரே செய்யப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் BAPS அதிகாரிகள் இந்த துயரமான சம்பவம் எங்களை பாதிக்கவில்லை, நாங்கள் வெறுப்பை எதிர்த்து உறுதியாக நிற்போம்” என்று தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்து மதத்திற்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் வட அமெரிக்கா இந்துக்கள் கூட்டமைப்பு இதனை மிகவும் வன்மையாக கண்டித்துள்ளது. “மீண்டும் ஒருமுறை இந்து மதத்துக்கு எதிரான வன்முறைகள் நடப்பதை உலகம் ஏற்க மறுக்கிறது” என்று கூறியுள்ளது.

அதோடு இந்து அமெரிக்கன் பவுண்டேஷன் இந்த சம்பவத்தின் புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து அமெரிக்காவில் “இந்து கோவில்கள் மீது நடக்கும் இது போன்ற செயல்களை விசாரணை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளது. மேலும் கலிபோர்னியா சிவில் உரிமைகள் துறை அறிக்கையின்படி 2023 இந்து மதத்திற்கு எதிரான வன்முறைகள் அமெரிக்காவில் இரண்டாவதாக அதிக அளவில் புகார் அளிக்கப்பட்ட சம்பவமாக உள்ள நிலையில் இது 23.3% சதவீதம் பதிவாகியுள்ளது.