அசாம் மாநிலத்தில் பாகிஸ்தான் ஆதரவு கருத்துகள் தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் பாகிஸ்தானுக்கு அனுதாபம் தெரிவித்து பதிவிட்டதற்காக, நாகோன் மற்றும் லக்கிம்பூர் மாவட்டங்களில் சபிகுல் இஸ்லாம் மற்றும் துலால் போரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, தற்போது வரை பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில் 92 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் தேசிய விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் எனவும் முதல்வர் தெரிவித்தார். “இது போன்ற தேச விரோத செயல்பாடுகளை எங்கள் அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன,” என்றும் அவர் கூறினார்.

இது மட்டுமல்லாமல், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF) கட்சியைச் சேர்ந்த திங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமினுல் இஸ்லாம் மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு கடந்த மே 1 ஆம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார்.

அதாவது ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அவரது கருத்துகள் சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. புல்வாமா தாக்குதலின் பின்னணியிலும் அரசாங்க சதி இருந்ததாகவும், அதேதான் பஹல்காம் தாக்குதலிலும் இருக்கலாம் என அவர் தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், AIUDF தலைவர் பத்ருதீன் அஜ்மல், எம்எல்ஏ அமினுல் இஸ்லாமின் கருத்துக்களில் இருந்து விலகி உள்ளார். “AIUDF அரசு பார்வையை ஆதரிக்கிறது. பயங்கரவாதிகளுக்கு மதம் கிடையாது. இஸ்லாத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் தான் பயங்கரவாதிகள்,” என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், அசாமில் பாகிஸ்தான் ஆதரவாக உரையாற்றும் நபர்களுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதை முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.