கோயம்புத்தூர் மாவட்டத்தில் கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அதனை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதனை அடுத்து விழாவில் பேசிய அமைச்சர் கூறியதாவது, திமுக ஆட்சி நிறைவான ஆட்சி என்று மக்கள் பாராட்டுகிறார்கள். முதலமைச்சர் கல்வித் துறைக்கு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். இதனால் அரசு பள்ளி மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது.

என்னுடைய தலைமை ஆசிரியர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தான். எங்களை விட முதலமைச்சர் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார். அவரை பார்க்க செல்லும் போதெல்லாம் பரீட்சைக்கு செல்லும் மாணவர்களை போல தயாராவோம். அப்படிப்பட்ட தலைமை ஆசிரியரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதேபோல பள்ளி கல்வித்துறையை சார்ந்த அதிகாரிகளும் வேலை பார்த்து வருகிறார்கள். அரசுக்கு வருவாய் ஈட்டி தரக்கூடிய துறை எங்கள் துறை அல்ல. கல்விக்கு செய்கின்ற முதலீடு என்பது நல்ல சமுதாயம் என்கிற வட்டியை பெற்று தரும் என அமைச்சர் கூறியுள்ளார்.