உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் ஹரிஷ் பட்டேல் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கெனவே 1 குழந்தை உள்ள நிலையில் 2 வதாக அவர் மனைவி நிறைமாத கர்ப்பமாக இருந்துள்ளார். பிரசவ வலி உண்டானதை தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இந்நிலையில் அங்கு ஹரிஷ் பட்டேலின் கர்ப்பிணி மனைவிக்கு குழந்தை பிறந்தது.

மருத்துவ செலவிற்காக ஹரிஷால் ரூ.4 ஆயிரம் கொடுக்க முடியவில்லை. உடனடியாக மருத்துவமனை கட்டணத்தை செலுத்த முடியாததால், தாயையும், பிறந்த குழந்தையையும் மருத்துவமனை ஊழியர்கள் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து கொண்டு பணத்தை கொடுத்துவிட்டு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர். ஹரிஷ் எங்கும் அலைந்து திரிந்து அந்த பணத்தை தயார் செய்யமுடியவில்லை.

இதனை தொடர்ந்து அவர்கள் ஹரிஸின் 3 வயது மகனை ரூ.20,000க்கு விற்று விடுமாறு நிர்பந்தித்துள்ளனர் . வேறு வழி இன்றி அவரும் மகனை விற்று விட்டு மனைவி மற்றும் குழந்தையை மருத்துவமனையில் இருந்து அழைத்து சென்றுள்ளார்.

இந்த சம்பவம் உறவினர்களுக்கு தெரியவரவே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி, குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் இடைத்தரகர் அம்ரேஷ் யாதவ், வளர்ப்பு பெற்றோர் போலா யாதவ் மற்றும் அவரது மனைவி கலாவதி, போலி மருத்துவர் தாரா குஷ்வாஹா மற்றும் மருத்துவமனை உதவியாளர் சுகந்தி உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். “குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது” என்று அதிகாரி கூறினார்.

“>